கடன் கட்டாததை விளம்பரப்படுத்திய நிதி நிறுவனம் - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.!
loan company write words at wall in theni
கடன் கட்டாததை விளம்பரப்படுத்திய நிதி நிறுவனம் - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.!
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே அன்னை இந்திரா நகர் காலனியில் வசித்து வருபவர் பிரபு. தனியார் நிறுவனத்தில் சமையலராக பணி புரிந்து வரும் இவர், தனது சொந்த வீட்டை தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

அந்தக் கடனுக்கான தவணையை முறையாக செலுத்திய பிரபு, ஆவணங்களைத் திருப்பித் தரும்படி தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது, அதிகாரிகள் இன்னும் ஒன்றரை லட்ச ரூபாய் கடன் தொகை பாக்கி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவற்றை செலுத்தி விட்டு ஆவணங்களை வாங்கி செல்லும்படியும் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபு, ஆதங்கத்துடன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார். அதன் பின்னர் வேலைக்காக பிரபு வெளியே சென்றிருந்த போது, அவரது வீட்டின் சுவற்றில் ’வீட்டுக் கடன் கட்டவில்லை’ என்று பெயின்டால் பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்துவிட்டு, வீட்டிலிருந்த பெண்கள் மற்றும் முதியவர்களை நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

இதைப்பார்த்து பேரதிர்ச்சியும், அவமானமும் அடைந்த பிரபு, வாங்கிய கடனுக்கு பணம் செலுத்திய பின்பும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிரட்டிய தனியார் நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், தனது வீட்டு ஆவணங்களை மீட்டுத் தரக் கோரியும், தேனி மாவட்ட காவல் துறை மற்றும் தமிழ்நாடு அரசிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
loan company write words at wall in theni