புறா பிடிக்க சென்ற கூலித்தொழிலாளி.! கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்.!
laborer died after falling into a well in Trichy
திருச்சி மாவட்டத்தில் புறா பிடிக்க சென்ற கூலித்தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா (39). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜா அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (23), சதீஷ் (21) ஆகியோருடன் நேற்று புறா பிடிப்பதற்காக பையித்தம்பாறை பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது இந்திரா நகர் காலனி பகுதியில் ஒரு மரத்திலிருந்து புறாவை பிடிக்க ராஜா சென்ற போது, எதிர்பாராத விதமாக ராஜசேகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் மற்றும் சதீஷ் சத்தம் போடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது ராஜா கிடைக்காததால், இதுகுறித்து முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய ராஜாவை பிணமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
laborer died after falling into a well in Trichy