ஹீரோவாக அறிமுகமாகிறார் ஷங்கரின் மகன் அர்ஜித்! புதிய படத்தின் பூஜை கோலாகலம்!
Shankar son Arjith makes his debut as a hero Grand launch ceremony for the new film
சென்னை: இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், ஹீரோவாக திரையுலகில் அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ‘முதல்வன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி இந்திய சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் ஷங்கர். குறிப்பாக, அவரது படங்களில் இடம்பெற்ற பிரமாண்ட காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப புதுமைகள் இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியவை.
ஆனால், ‘2.0’, ‘இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’ போன்ற அண்மைக்கால படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், ஷங்கரின் திரைப் பயணம் சவாலான கட்டத்தைச் சந்தித்து வருகிறது. தற்போது அவர் ‘வேள்பாரி’ திரைப்படத்தை பிரமாண்டமாக இயக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அதற்கு முன்பாக குறுகிய காலத்தில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தையும் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ஷங்கரின் மகன் அர்ஜித் இதுவரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். எதிர்காலத்தில் இயக்குநராக அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது ஹீரோவாக களமிறங்குவது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அஷோக் இயக்குகிறார். நடிகை கிரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், ஒரு புதுமுக இசையமைப்பாளர் அறிமுகமாகிறார்.
நேற்று நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், இயக்குநர் ஹெச். வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஒரு வாரம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இயக்குநரின் மகனாக அர்ஜித் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகும் நிலையில், அவரது முதல் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shankar son Arjith makes his debut as a hero Grand launch ceremony for the new film