184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்: இருபாலர் கல்லூரியாக மாறுகிறது சென்னை பச்சையப்பன் கல்லூரி!இனி பெண்களும் சேரலாம்!
A new chapter in its 184 year history Chennai Pachaiyappa College is becoming a co educational institution Women can now enroll too
சென்னை: 184 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு (Pachaiyappa's College) தமிழ்நாடு அரசு இருபாலர் (Co-Educational) அந்தஸ்து வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலைப் படிப்புகளிலும் மாணவிகள் சேர்ந்து பயில முடியும்.
இதுவரை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் மட்டுமே மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இளங்கலைப் படிப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பது கல்லூரியின் 184 ஆண்டுகால வரலாற்றில் மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.
1842-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி, தமிழகத்தின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், ஈ.வி.கே. சம்பத், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகளை உருவாக்கிய பெருமை இந்தக் கல்லூரிக்கு உண்டு.
கடந்த சில ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், இருபாலர் கல்லூரிகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்விச் சூழலை மேம்படுத்தவும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை எண் 100 (G.O. No.100)-ஐ வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை நந்தனத்தில் உள்ள அரசு ஆடவர் கலைக் கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதேபோன்ற மாற்றம் தற்போது பச்சையப்பன் கல்லூரியிலும் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் பேராசிரியர் பேபி குல்னாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இருபாலர் அந்தஸ்து என்பது கல்லூரியின் வரலாற்றில் புதிய அத்தியாயம். தரமான உயர்கல்விக்கான வாய்ப்புகளை மாணவிகளுக்கு விரிவுபடுத்துவதோடு, பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் நிறைந்த கல்விச் சூழலை உருவாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரியில் தற்போது 12 இளங்கலைப் பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் 1,100 மாணவர்கள் இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். புதிய மாற்றத்தால், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகளும் இக்கல்லூரியில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற உள்ளனர்.
இரண்டு நூற்றாண்டுகளை நெருங்கும் பாரம்பரிய கல்வி நிறுவனம், காலத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு முன்னேறுவது தமிழக உயர்கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
A new chapter in its 184 year history Chennai Pachaiyappa College is becoming a co educational institution Women can now enroll too