தமிழகத்தின் உரிமைக்காக ஒன்றிணைந்த தலைவர்கள்...! உதயநிதி கோரிக்கையை ஏற்று மேகதாது தீர்மானத்தில் அதிரடி மாற்றம் செய்த முதல்வர் விஜய்...!
Leaders united rights Tamil Nadu Chief Minister Vijay made drastic change Mekedatu resolution accepting Udhayanidhi request
தமிழக சட்டப்பேரவையில் இன்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் மீதான விவாதம் தீவிரமாக நடைபெற்றது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
இந்த விவாதத்தில் அமைச்சர்கள் ராஜேஷ்குமார், வன்னியரசு மற்றும் உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க.), நித்யானந்தம் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), ஆர். செல்லசுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ராஜேந்திரன் (ம.தி.மு.க.), சவுமியா அன்புமணி (பா.ம.க.), எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.) மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் (தி.மு.க.) ஆகியோர் உரையாற்றினர்.

விவாதத்தில் பேசிய அனைவரும், மேகதாது அணைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அரசின் தனித்தீர்மானத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினர்.விவாதத்தின் நிறைவில் முதலமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றினார்.அப்போது அவர் பேசியதாவது,“அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை பகிர்ந்த அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றியபோது, அரசின் தனித்தீர்மானத்தில் கூடுதல் கருத்தொன்றை இணைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.அது தொடர்பாக பேரவைக்கு முக்கியமான தகவலை தெரிவிக்க விரும்புகிறேன்.மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக, எனது தலைமையில் கடந்த 26-05-2026 அன்று சட்ட நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், மேகதாது விவகாரத்திற்கென பிரத்யேக தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது.இதற்காக தனி நடுவர் மன்றம் அமைக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
எனவே, எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கருத்தை அரசின் தனித்தீர்மானத்தின் 4-வது பத்திக்குப் பின்னர் கூடுதல் அம்சமாக இணைக்குமாறு பேரவை தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.”இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, திருத்தங்களுடன் கூடிய அரசினர் தனித்தீர்மானம் மீது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குரல் வாக்கெடுப்பு நடத்தினார்.இதில், மேகதாது அணைக்கு எதிரான அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
English Summary
Leaders united rights Tamil Nadu Chief Minister Vijay made drastic change Mekedatu resolution accepting Udhayanidhi request