பெற்ற மகனைக் கொன்று தாயும் தற்கொலை...! வெளியூர் வேலை பிடிக்காததால் அரங்கேறிய பயங்கர விபரீதம்...!
Mother kills her own son and commits suicide terrible tragedy unfolded because she did not like working abroad
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் நிகழ்ந்த தாய்-மகன் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம், லதாரா அருகேயுள்ள துத்மானியா பகுதியைச் சேர்ந்தவர் பவன்சிங் பாட்லே (30). இவரது மனைவி சந்தியாபாய் (29).
இவர்களுக்கு 2½ வயதுடைய பிரபேஷ்சிங் என்ற ஆண் குழந்தை இருந்தது.பவன்சிங் பாட்லே, பொம்மிடியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் கடந்த 10 ஆண்டுகளாக மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் நூற்பாலை வளாகத்திலுள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

அவரது மனைவி சந்தியாபாயும் அதே நூற்பாலையில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில நாட்களாக சந்தியாபாய் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். சொந்த ஊரை விட்டு தொலைதூரத்தில் தங்கி வாழ்வது மிகவும் மனவேதனையை அளிப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் அவர் அடிக்கடி பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பவன்சிங் பாட்லே நண்பர்களுடன் 3 நாள் சுற்றுலாவாக கேரளா சென்றுவிட்டு நேற்று முன்தினம் திரும்பியிருந்தார். பின்னர் வழக்கம்போல் வேலைக்குச் சென்ற அவர், பணியை முடித்துவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பேரதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொம்மிடி காவலர்கள், தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மற்றும் அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், வெளியூரில் தங்கி வேலை செய்து வந்த மனஅழுத்தம் மற்றும் தனிமை உணர்வு காரணமாக இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த துயர சம்பவம் பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother kills her own son and commits suicide terrible tragedy unfolded because she did not like working abroad