கோவையில் சினிமா பாணியில் தங்க கட்டிகளை கொள்ளையடித்த கும்பல் - போலீசார் தேடுதல் வேட்டை!
Kovai Gold Smuggling
கோவை அருகே, காரை வழிமறித்து 1.25 கிலோ தங்கம் மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த ஜெய்சன் ஜேக்கப், தனது கடை ஊழியர் விஷ்ணுவுடன் சென்னையில் இருந்து 1 கிலோ 250 கிராம் தங்கக்கட்டிகள் வாங்கி ரயிலில் கோவையை வந்தடைந்தனர்.
இன்று காலை, சொகுசு காரில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த அவர்கள், க.க.சாவடியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, திடீரென ஒரு லாரி வழியை மறித்தது.
அதே சமயம், ஐந்து பேர் கொண்ட கும்பல் காரை சுற்றி வளைத்து, கண்ணாடி உடைத்து, கத்தியால் மிரட்டி, தங்கத்தையும் பணத்தையும் பறித்தனர். பின்னர், இருவரையும் வலுக்கட்டாயமாக காரில் இருந்து இறக்கிவிட்டு, கொள்ளையுடன் தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட இருவரும் அருகிலிருந்தோர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். வழக்குப் பதிவு செய்த க.க.சாவடி போலீசார், சிசிடிவி காட்சிகள், கைபேசி தடங்கள் உள்ளிட்டவற்றை வைத்து கொள்ளை கும்பலைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.