அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி, காரை பரிசாக வென்ற கருப்பாயூரணி கார்த்தி..!
Karuppayurani Karthik tamed 19 bulls in the Alanganallur Jallikattu competition and won a car as a prize
காணும் பொங்கலை முன்னிட்டு இன்று, உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்று காலை 07:00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில், சுமார் 1,100 காளைகளும்,600 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர்.
குறித்த போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகளாக நடைபெற்றது. இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், 19 காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான ரூ.8 லட்சம் மதிப்பிலான காரை கருப்பாயூரணி கார்த்தி பரிசாக பெற்றுள்ளார்.

அடுத்ததாக, 16 காளைகளை அடக்கி பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 02வது இடத்தையும், 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் 03-வது இடத்தை பிடித்துள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் நின்று மிரட்டிய ஏவிஎம் பாலாவின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்ற பாலாவுக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கான 02-வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்செல்வனுக்கு பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த காளைக்கான 03-வது பரிசாக அதன் உரிமையாளரான மதுரையை சேர்ந்த கென்னடிக்கு இ-பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Karuppayurani Karthik tamed 19 bulls in the Alanganallur Jallikattu competition and won a car as a prize