பச்சை அட்டை கொடுத்து, பச்சையாக ஏமாற்றிய கும்பல்.. ரேஷன் அட்டை பெயரில் அரங்கேற்றம்.. மக்களே உஷார்.!
Kanyakumari Ration Fraud Police gives warning peoples
இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரம் சுற்றுவட்டார பகுதியில் வியாழக்கிழமை காலையில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஐந்து பேர் கொண்ட கும்பல் வீடு வீடாகச் சென்று, தங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வருகிறோம் என்றும், தங்களை ரேஷன் கடை அதிகாரிகள் என்றும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து ஒவ்வொரு வீட்டிலும் அவர்களது ஸ்மார்ட் கார்டு கேட்டு பெற்று ஆய்வு செய்து கொள்வது போல நடித்து விட்டு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்ட பச்சை வண்ண அட்டை என்று ஒரு அட்டையை கொடுத்து, இதனை இந்தியாவில் உள்ள எந்த ரேஷன் கடைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
அந்த அட்டையில், கவர்மெண்ட் ஆப் இந்தியா மற்றும் நமது தூய்மை இந்தியா என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூபாய் 30 வீதம் வசூல் செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு இந்த அட்டையை பயன்படுத்தி ரேஷன் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்த நிலையில், இவர்கள் மீது மக்கள் சந்தித்துள்ளனர்.
முன்னதாகவே இவர்களின் பேச்சில் மயங்கிய 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ரூபாய் 30 வீதம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக விசாரணை செய்கையில், தாங்கள் அரசு ஊழியர்களை எந்தவிதமான பணிக்காகவும் எங்கும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari Ration Fraud Police gives warning peoples