கரூர் பைபாஸில் புதிதாக கட்டப்பட்டு வரும் பங்களாவில் ஐ.டி ரெய்டு..!!
IT Raid on newly constructed bungalow at Karur Bypass
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் உட்பட அவருக்கு நெருக்கமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக், கோவையில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகம், மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக இருக்கும் நபர்களின் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனையில் சுமார் 3.5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதே போன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கரூர் பைபாஸில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் பைபாஸில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியின் மனைவி பெயரில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாக கூறப்படும் பிரம்மாண்டமான பங்களா வீட்டில் 3 கார்களில் வந்த 10க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் வீடு கட்டுப் பணியில் ஈடுபட்டு உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இன்று காலை செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் கரூர் பைபாஸில் கட்டப்பட்டு வரும் புதிய பங்களாவிலும் இன்று மாலை சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
IT Raid on newly constructed bungalow at Karur Bypass