வீட்டுப்பாடம் செய்யவில்லை எனில் பிரம்படி, கழிவறை சுத்தம் செய்ய கட்டளை...! - ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் கொடூரம்...!
If you dont do your homework you beaten and ordered to clean the toilet Cruelty at Adi Dravidar Welfare School
பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கும் அரசுப் பள்ளியில், மாணவிகளை கழிப்பறை உள்ளிட்ட தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தியதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஞ்சூர்பதி கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 40 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவர்கள் சிலர் கழிப்பறையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் கடந்த வியாழக்கிழமை முதல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.பள்ளிக்கு தூய்மைப் பணியாளர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்ற காரணத்தை முன்வைத்து, தலைமையாசிரியை மாணவிகளை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தியதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபோன்ற பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டதால், அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.மாணவிகளை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியதாக எழுந்த புகாருடன், பள்ளி நிர்வாகத்தின் மீது மேலும் பல அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி மாணவி ஒருவரை தலைமையாசிரியை பிரம்பால் கடுமையாக தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதில் அந்தச் சிறுமியின் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டிகள் முறையாக தூய்மைப்படுத்தப்படுவதில்லை என்றும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். குடிநீர்த் தொட்டிகளில் தவளைகள் மிதக்கும் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பள்ளியின் சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களுக்கு போதிய தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்றும் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தியதாக எழுந்த புகார் உள்ளிட்ட தொடர் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு குழந்தை நலக் குழு உறுப்பினர்கள் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.பள்ளியின் நிலைமை மற்றும் மாணவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பழங்குடியின மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் அரசுப் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
If you dont do your homework you beaten and ordered to clean the toilet Cruelty at Adi Dravidar Welfare School