ஆள் கடத்தல் வழக்கு: MLA ஆஜராக ஐகோர்ட் அதிரடிஉத்தரவு!
Human trafficking case MLA summoned by High Court
ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பிஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. வின் வீடு கே.வி. குப்பம் பூந்தமல்லியில் உள்ளது. நேற்று முன்தினம் திடீரென திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையில் போலீசார் ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பான சூழல் எற்பட்டது. இதையடுத்து இந்த தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் குவிந்ததனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.ஆனால் அவரை கைது செய்யமுடியவில்லை.
இந்தநிலையில் திருவள்ளூரை அடுத்த களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் தனுஷ் என்பவர் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு தேனியை சேர்ந்த விஜயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 7-ந்தேதி தனுசின் 16 வயது தம்பியை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்று பின்னர் மீண்டும் வீட்டில் விட்டு சென்றது, இந்த கடத்தலில் எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று காலை நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.
மேலும் ஜெகன்மூர்த்தி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார். கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
English Summary
Human trafficking case MLA summoned by High Court