உணவு தரம் எப்படி இருக்கு...? உணவை ருசித்து வன்னி அரசு நடத்திய அதிரடி ஆய்வு... ! - மக்கள் விடுத்த கோரிக்கை என்ன...?
How food quality survey conducted by Vanni arasu after tasting food What demands made by people
இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள உழவர் சந்தைக்கு, தமிழக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்து, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை விரிவாக கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த கழிவறையையும் அமைச்சர் பார்வையிட்டார். அப்போது கழிவறை பராமரிப்பு திருப்திகரமாக இல்லாததை கண்ட அவர், உடனடியாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அருகிலிருந்த அம்மா உணவகத்திற்குச் சென்ற அமைச்சர், அங்கு வழங்கப்பட்ட நவதானிய உணவுகளை சுவைத்து தரத்தை ஆய்வு செய்தார். அப்போது சாம்பாரில் காய்கறிகள் இடம்பெறாதது குறித்து பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, தேவையான அளவில் காய்கறிகள் தொடர்ந்து வழங்கப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், அம்மா உணவகத்திற்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் வன்னி அரசு உடனடியாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பொதுமக்களின் கோரிக்கையை எடுத்துரைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப் பணிகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
English Summary
How food quality survey conducted by Vanni arasu after tasting food What demands made by people