மதிப்பெண் வாழ்க்கையைத் தீர்மானிக்காது...! - பிளஸ்-2 மாணவி எடுத்த துயர முடிவு...!
Grades do not determine life tragic decision made by Plus 2 student
கோவை கணபதி தங்கம்மாள் நகரை சேர்ந்த ராம்குமார் - நர்மதா தம்பதியின் மகளான யாழினி, தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்தார்.
கல்வியில் அதிக ஆர்வத்துடன் தொடர்ந்து சிறப்பாகப் படித்து வந்த அவர், பொதுத்தேர்விலும் உயர்ந்த மதிப்பெண் பெறுவேன் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் யாழினி 454 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். ஆனால் தான் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் வராததால் கடும் மனவேதனையில் ஆழ்ந்த அவர், தனது தாயாரிடம் கதறி அழுததாக தெரிவிக்கப்படுகிறது.
மகளின் மனநிலையை உணர்ந்த நர்மதா, அவருக்கு ஆறுதல் கூறி தேற்ற முயன்றுள்ளார்.இதற்கிடையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், யாழினி தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழக்க முயன்றுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் நர்மதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் உடனடியாக மகளை மீட்டு கணபதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மனஉளைச்சலால் மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பேர்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Grades do not determine life tragic decision made by Plus 2 student