மதுரை மாரத்தான் போட்டியில் மாணவர் உயிரிழந்தது ஏன்? அரசு மருத்துவமனை விளக்கம்.!
Govt hospital explains about student death in madurai marathon
இன்று காலை மதுரையில் உதிரம் கொடுப்போம் - உயிர் காப்போம் எனும் முழக்கத்துடன் குருதிக்கொடையை வலியுறுத்தி மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "உதிரம் 2023 " மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட பலர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற தினேஷ் என்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தினேஷ் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று காலை மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட நிலையில் திடீரென ஏற்பட்ட வலிப்பால் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில் "இன்று காலை இரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர் தினேஷ் மாரத்தான் முடிந்து 1 மணி நேரத்திற்கு மேலாக சக கல்லூரி மாணவர்களுடன் இயல்பாகவே இருந்துள்ளார். அதன் பிறகு மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலை 8.45 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தினேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 10.10 மணியளவில் மீண்டும் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி 10.45 மணியளவில் உயிரிழந்தார்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Govt hospital explains about student death in madurai marathon