கடன் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
Governor R N Ravi approves the debt restructuring bill
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் கடன் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்ட பேரவையில் கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அப்போது அதில் ,கடன் வாங்கியவரின் வீடு, வசிப்பிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகியவற்றுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க கூடாது , அரசு திட்டத்தின்கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருவது போன்றவை இச்சட்டத்தின் 20-வது பிரிவின்படி வலுக்கட்டாய நடவடிக்கைகளாக கருதப்படும்.
அதன்படி, 20-வது பிரிவில் கூறப்பட்டுள்ள குற்றங்களை செய்தால், 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அதற்கு கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால், அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாக கருதப்படும். மேலும், கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சட்டப்பேரவையில்மசோதாவை துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீது கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இறுதியில், தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்ட மசோதா உள்ளிட்ட 18 சட்ட மசோதாக்களும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.இதையடுத்து கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் கடன் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
English Summary
Governor R N Ravi approves the debt restructuring bill