விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.. தமிழக அரசுக்கு ஜி கே வாசன் கோரிக்கை.!!
gk vasan statement on nov 16
தமிழகஅரசு பருவ மழையால் சேதமடைந்துள்ள விவசாயப் பயிர்களை கணக்கெடுத்து அறிவித்திருக்கும் இழப்பீட்டுத்தொகை போதுமானதல்ல . மறுபரிசீலனை செய்து கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வடகிழக்கு பருவமழை, கன மழை, வெள்ளம் ஆகியவற்றால் மாநிலத்தில் சேதமடைந்த விவசாயப் பயிர்களுக்கு உரிய இழப்பீடு , நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த கணக்கீடும் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் அறிவித்திருக்கிறது . இதில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேர் 1 க்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அறிவித்திருக்கும் இழப்பீட்டுத்தொகை குறைவு. அதே போல மறுசாகுபடி செய்ய இடுபொருட்களுக்கு ஏக்கருக்கு 6,038 ரூபாய் மதிப்பிட்டிருப்பதும் போதுமானதல்ல. சேதம் அடைந்த விவசாய பயிர்களை முழுமையாக கணக்கெடுத்திருக்க வேண்டும் என்றும் , சேதமடைந்த பயிர்களுக்கு அறிவித்த இழப்பீட்டுத்தொகை போதுமானதல்ல என்றும், சேதமடைந்த பயிர் நிலங்களை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மழை, வெள்ள பாதிப்பில் இருக்கின்ற விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கின்ற நிவாரண உதவிகள் போதுமானதல்ல. தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கின்ற விவசாயப் பயிர் சேத இழப்பீட்டுக்கான தொகையை மறுபரிசீலனை செய்து கூடுதலாக வழங்க வேண்டும்.
மிக முக்கியமாக மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் எதிர்பார்க்கும் இழப்பீட்டுத்தொகை கிடைத்தால் தான் தொடர் விவசாயத்திற்கு ஏதுவாக இருக்கும்.
விவசாயிகளும் நஷ்டத்தில் இருந்து மீள்வார்கள் . எனவே தமிழக அரசு மாநிலம் முழுவதும் டெல்டா உள்ளிட்ட அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் மழையினால் சேதமுற்ற அனைத்து பயிர்களையும் சரியாக கணக்கெடுத்து சேதத்தை சரிசெய்யும் அளவிற்கு இழப்பீட்டுத்தொகை கொடுக்கவும் , விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவும் முன்வர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
gk vasan statement on nov 16