இனி மெட்ரோ தூண்கள் பளபளக்கும்...! விதிகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்கள், விளம்பரங்கள் அதிரடி அகற்றம்...! - மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை...!
From now on metro pillars shine Posters and advertisements pasted violation rules removed hurry Warning strict action if violated
ஆலந்தூர் மண்டலத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ இரயில் பாலத் தூண்களில், பெருநகர சென்னை மாநகராட்சியின் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதனை அமைத்த தனியார் நிறுவனம் ஓராண்டிற்கான உரிமக் கட்டணமாக ரூ.35.73 லட்சத்தை சென்னை மாநகராட்சிக்கு செலுத்தியுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மீது தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விதிமுறைகளை மீறும் விளம்பரப் பலகைகள் உடனடியாக அகற்றப்படுவதுடன், அதன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, ஆலந்தூர் மண்டலத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் பாலத்தின் தூண்களில் முத்ரா நிறுவனம் அனுமதியின்றி 31 விளம்பரப் பலகைகள் அமைத்திருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், 2026–2027 நிதியாண்டிற்கான உரிமக் கட்டணம் செலுத்தப்படாமல் இந்த விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டார ஆணையாளர் அதாப் ரசூல் அறிவுறுத்தலின்படி, ஆலந்தூர் மண்டல அலுவலர்கள் நேற்று விளம்பரப் பலகைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் உடனடியாக 16 பாலத் தூண்களில் 31 விளம்பரப் பலகைகள் வைப்பதற்கான 2026–2027 ஆம் ஆண்டிற்கான உரிமக் கட்டணமாக ரூ.35,73,314-ஐ சென்னை மாநகராட்சிக்கு செலுத்தியது.இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு விதிமுறைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைக்க விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கட்டாயம் உரிமக் கட்டணம் செலுத்தி மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்ற பின்னரே பலகைகள் அமைக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் உடனடியாக அகற்றப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
From now on metro pillars shine Posters and advertisements pasted violation rules removed hurry Warning strict action if violated