மக்களே அலர்ட்...! இனி பிரித்து கொடுத்தால் தான் குப்பை எடுக்கப்படும்...! - மாநகராட்சி அதிரடி உத்தரவு
From now on garbage only collected if you separate it Municipal Corporation emergency order
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையை மேலும் திறம்பட செயல்படுத்தும் நோக்கில், குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து கட்டிட உரிமையாளர்களும் கழிவுகளை உருவாகும் இடத்திலேயே வகைபிரித்து ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026-இன் அடிப்படையில், உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் உள்ளிட்ட எளிதில் மக்கும் பொருட்கள் அனைத்தும் பச்சை நிறத் தொட்டியில் மட்டுமே சேகரிக்கப்பட வேண்டும்.காகிதம், பிளாஸ்டிக், உலோகப் பொருட்கள், அட்டைப்பெட்டிகள், துணிகள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய மக்காத கழிவுகள் அனைத்தும் நீல நிறத் தொட்டியில் தனியாக வைக்கப்பட வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட சுகாதாரத் துண்டுகள், குழந்தைகளுக்கான உறிஞ்சும் துணிகள், மருத்துவக் கட்டுப் பொருட்கள் போன்ற சுகாதாரக் கழிவுகள் பாதுகாப்பாக சுற்றப்பட்ட நிலையில் சிவப்பு நிறத் தொட்டியில் மட்டும் போடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மின்கலன்கள், மின்விளக்குகள், குழாய் விளக்குகள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், வண்ணப்பூச்சு டப்பாக்கள் உள்ளிட்ட வீட்டு அபாயகரக் கழிவுகள் கருப்பு நிறத் தொட்டியில் தனியாக சேகரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் வீடு தோறும் வரும்போது, இந்த நான்கு வண்ணத் தொட்டிகளுடன் கூடிய சேகரிப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் மக்கும் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், குப்பைக் கிடங்குகளுக்கு செல்லும் கழிவுகளின் அளவை கணிசமாக குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் கழிவுகளை முறையாக வகைபிரித்து மட்டுமே மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறினால் அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
From now on garbage only collected if you separate it Municipal Corporation emergency order