தொடர் கன மழை எதிரொலி..!! வேலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு..!! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!
Flooding in Vellore palar River
மாண்டஸ் புயலை தொடர்ந்து தமிழகம் - ஆந்திர மாநில எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் சித்தூர், மதனபள்ளி, புங்கனூர், பலமநேர் பகுதியில் பெய்த கனமழையால் பெத்தபஞ்சணியில் உள்ள மாடி ஏரி நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக குடியாத்தத்தில் அமைந்துள்ள மோர்த்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி வழியாக பாலாற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோன்று ஜவ்வாது மலையில் பெய்யும் மழையால் அமிர்தி அருகே அமைந்துள்ள நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசால் கட்டப்பட்டுள்ள புல்லூர் அணை நேற்று அதிகாலை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் நாராயணபுரம், ராமசமுத்திரம் ஏரிகள் நிரம்பி வாணியம்பாடி, அம்பலூர், ஆம்பூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Flooding in Vellore palar River