ரூ.4 கோடி நிலத்தை குறிவைத்து போலி ஆவணம்...? சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது...!
Fake documents targeting 4 crore land 3 people including brothers arrested
ராமநாதபுரம் அருகே ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சகோதரர்கள் உள்பட 3 பேரை நிலமோசடி தடுப்புப்பிரிவு காவலர்கள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் அருகே வாணிகிராமம் உசேனியா தெருவைச் சேர்ந்தவர் பக்ருதீன்.
இவரது மனைவி ஹாஜரா பானுவுக்கு வாணிகிராமத்தில் சொந்தமாக நிலம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி என கூறப்படுகிறது.இந்த நிலையில், ராமநாதபுரம் வெளிப்பட்டினம் தர்ப்பசயனம் சாலை பகுதியைச் சேர்ந்த ஜாபர்அலி என்பவர், ஹாஜரா பானுவுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக போலியான பவர் பத்திரத்தை தயாரித்ததாக புகார் எழுந்துள்ளது.

அந்த ஆவணத்தின் அடிப்படையில் நிலத்தின் ஒரு பகுதியை ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன்களான சந்திரகுமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு தனித்தனியாக விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிலத்தை வாங்கியதாக கூறப்படும் சந்திரகுமார், அந்த இடத்தில் வீடு கட்டியுள்ளார். செந்தில்குமார் தனது பகுதிக்கு சுற்றிலும் வேலி அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தனக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டிருப்பதை அறிந்த ஹாஜரா பானு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் நிலமோசடி தடுப்புப்பிரிவு ஆய்வாளர் பொன்தேவி தலைமையிலான காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையின் தொடர்ச்சியாக ஜாபர்அலி, சந்திரகுமார், செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.ரூ.4 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் கைமாறியதாக எழுந்துள்ள இந்தப் புகார் தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலத்தின் ஆவணங்கள், விற்பனை தொடர்பான பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Fake documents targeting 4 crore land 3 people including brothers arrested