கோவளம் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்?; கிருஷ்ணசாமி கேள்வி..!
Krishnasamy asked why an explanatory report was not submitted to the Assembly regarding CM Vijays speech at the Kovalam conference
Reels content மற்றும் மீடியா வெளிச்சத்தை குறிவைத்து தமிழக அமைச்சர்கள் பேசுவதாக விமர்சித்துள்ள கிருஷ்ணசாமி, சட்டமன்ற நிகழ்வுகள் திசைமாறிப் போகின்றனவா..? என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்..? என்று கேள்வி யெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
''துறை ரீதியான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அன்றாடம் எழும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினாக்களுக்கு, ஆக்கபூர்வமாகப் பதிலளிக்க வேண்டிய அமைச்சர்களின் அர்த்தமற்ற, திசைதிருப்பும் பதில்கள் — 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை என்ன?' என்று கேட்பது போல உள்ளன.
நேரலை ஒளிபரப்பில் அவர்களின் இத்தகைய வீராவேசப் பதில்கள் சமூக ஊடக Content-களுக்கு பயன்படுமே தவிர, மக்களுக்குக் கிஞ்சித்தும் பயன் தராது. ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையில் உள்ள பேரவைத் தலைவர், இருதலைக்கொள்ளி எறும்பைப் போல் நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கிறார்.
அமைச்சர்களின் அடாவடியான, அருவருக்கத்தக்க பேச்சுக்கள் லட்சக்கணக்கான மக்களிடையே நேரலையில் சென்றடைந்த பிறகு, அதைக் குறிப்பிலிருந்து நீக்குவது ”குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குச் சமம்”; இதனால் யாருக்கு என்ன பலன்?
காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழக்த்திலிருந்து எதிர்ப்புகள் எழும் என்று எண்ணி, எவ்வித முன்அறிவிப்புமின்றி, தமிழகத்திலுள்ள கோவளம் பகுதியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்னிந்திய முதலமைச்சர்களுடைய மாநாடு நடைபெற்றது.
இதில் மேகதாது பிரச்சனை, காவிரி நதிநீர்ப் பங்கீடு, பெரியாறு அணைக்கட்டு உயரத்தை 152 அடியாக உயர்த்துவது, ஆந்திராவுடனான பாலாறு குறித்த பிரச்சனைகள் குறித்து தமிழக முதலமைச்சர் பேசியது என்ன? என்பது குறித்து தமிழகச் சட்டமன்றத்திற்கு அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்க வேண்டுமே, ஏன் முதலமைச்சர் விஜய் அவர்கள் அதைச் செய்யவில்லை? இது குறித்து எதிர்கட்சியினர் எவரும் வினா எழுப்பவில்லையே ஏன்?
’பட்டுக்கோட்டைக்கு’ வழி கேட்டால் ’கொட்டைப்பாக்கின்’ விலை என்ன? என்பதற்கேற்ப அமையும் தமிழக அமைச்சர்களின் பதில்கள்! “Reels content”- மீடியா வெளிச்சத்தை குறிவைத்து பேசும் தமிழக அமைச்சர்கள்!
கோவளம் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசியது குறித்து சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் திசைமாறிப் போகிறதா?'' என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Krishnasamy asked why an explanatory report was not submitted to the Assembly regarding CM Vijays speech at the Kovalam conference