அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்: "இடைத்தேர்தலில் வெற்றி பெற்று துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம்!"
EPS Chairs Key AIADMK District Secretaries Meeting Post Election Setback Vows to Win By-Elections Against Defectors
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநிலத் தலைமை நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுத் தேர்தல் பின்னடைவைச் சந்தித்தது, கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த சூழலில் இக்கூட்டம் கூடியது.
இக்கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மற்றும் ஏற்கனவே பொறுப்பில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான பின்னணிகள், கட்சிக்குள்ளே வெடித்துள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் கட்சியின் செல்வாக்கை நிலைநாட்டுவது குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வை மீண்டும் வலிமையான இயக்கமாக மீட்டெடுக்க மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அடிமட்ட தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்துச் சளைக்காமல் உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், அ.தி.மு.க.வின் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்துள்ள அரசியல் நகர்வைக் குறிப்பிட்ட அவர், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற வைத்து, கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்களுக்குத் தொண்டர்களும் மக்களும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அழைப்பு விடுத்தார். இக்கூட்டம் அ.தி.மு.க. அரசியல் களத்தில் புதிய சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
EPS Chairs Key AIADMK District Secretaries Meeting Post Election Setback Vows to Win By-Elections Against Defectors