#பெரம்பலூர் || தமிழகத்தில் முதன்முறையாக.. பள்ளி மாணவர்களுக்கான "கல்வியும், காவலும்" திட்டம்..!!
education and guarding project started in perambalur
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கென முதல்முறையாக காவல்துறை சார்பில் "கல்வியும் காவலும்" எனும் விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் "கல்வியும் காவலும்" என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை மக்களின் நண்பன் என்பதை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணர்த்தும் நோக்கத்தோடு காவல்துறையினரின் அன்றாட செயல்பாடுகள் குறித்து எளிதில் மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் 400 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், வேலுமணி, துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி, ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், விஜயலட்சுமி மற்றும் போதை மற்றும் மனநல மருத்துவர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், பணிபுரியும் ஒவ்வொரு போலீசாரின் பொறுப்புகள் பற்றியும் விளக்கம் அளித்தார். காவல் துறையில் இயங்கும் விரல் ரேகை பிரிவு, மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் காவல் துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமாக கூறினார்.

மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, இந்த திட்டம் குறித்து பேசும்போது "தொடுதல் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். மாணவிகள் பயமில்லாமல் தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும். அப்படி சொல்ல முடியாத சூழ்நிலையில் காவல் நிலையத்திற்கு வந்து நேரடியாகவே புகார் அளிக்கலாம். மாணவர்களுக்காக கடமையாற்ற காவல்துறை உள்ளது.
கல்வியும், காவலும் திட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் காவல் நிலையங்களுக்கு மாணவ மாணவிகளை வரவழைத்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்படும். அந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
English Summary
education and guarding project started in perambalur