பிரபல திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி...!!
Dravidian speaker Nanjil Sampath admitted in Hospital
திராவிட இயக்கங்களின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி கடந்த 2012ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த அவர் தினகரன் அமமுகவை ஆரம்பித்த போது அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை எனக் கூறி அக்கட்சியில் இணையவில்லை. பின்னர் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்ட நாஞ்சில் சம்பத், சமீப காலமாக திமுக நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வந்தார்.
சில திரைப்படங்களில் நடிப்பதோடு இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வந்தார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரபல திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Dravidian speaker Nanjil Sampath admitted in Hospital