ஈகியர்களின் கனவை நனவாக்கியே தீருவோம்! இடப்பங்கீட்டை வென்றெடுத்தே தீருவோம் - மருத்துவர் இராமதாஸ்
Dr Ramadoss saloute to Vanniyar Reservation Martyrs
வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களுக்கு வீரவணக்கம்: இடப்பங்கீட்டை வென்றெடுத்தே தீருவோம் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் உறுதியேற்றுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வன்னியர் இடப்பங்கீட்டுப் போரில் துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கும் அவர்களின் 36-ஆவது நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்துகிறேன்.

அவர்களின் தியாகம் ஒப்பீடற்றது. பின் தங்கி கிடந்த சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக இன்னுயிரையே ஈகம் செய்த அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஆனால், அவர்களின் ஈகத்துக்குரிய முழுமையான பயன்கள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. வன்னியர் சமுதாயத்திற்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீட்டை வென்றெடுப்பது தான் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும். 
நமக்கான இடப்பங்கீட்டை நான் வென்றெடுத்தே தீருவோம்; ஈகியர்களின் கனவை நனவாக்கியே தீருவோம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சமுதாயத்தில் அடித்தட்டுக்கும் கீழ் பின் தங்கிக் கிடந்த பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக மருத்துவர் அய்யா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூக நீதிப் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், தாக்குதலுக்கும் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் இன்று 36-ஆவது நினைவு நாள்.
அவர்கள் செய்த ஈடு இணையற்ற தியாகத்திற்காக அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் வணங்குகிறேன்... போற்றுகிறேன்.
வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் மருத்துவர் அய்யா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூகநீதிப் போராட்டத்தின் இலக்கு ஆகும். அந்த நோக்கத்தை நாம் வென்றெடுக்கும் நான் வெகுதொலைவில் இல்லை. அந்த இலக்கை அடைவதற்கான அனைத்து வழிகளிலும் போராடுவதற்கு நாம் தயாராவோம்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss saloute to Vanniyar Reservation Martyrs