நட்புறவை ஏற்படுத்தி ஒற்றுமையை வளர்க்க உறுதியேற்போம் - மருத்துவர் அன்புமணி மிலாது நபி வாழ்த்து..!
Dr Anbumani Ramadoss Greetings about miladi nabi 2020
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அற்புதங்கள் நிகழ்த்திய இஸ்லாமிய தீர்க்கதரிசி நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறு வயதில் தாயை இழந்த நபிகள் தமது இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்தார். நாற்பது வயதில் இறைத்தூதுகளை பெறத் தொடங்கிய அவர், அடுத்த 23 ஆண்டுகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தினார். வறுமையிலும் அவர் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மை மட்டுமே உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்தார். அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமான பாடமாக இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போற்றப்படுகிறது.
இறைதூதர் நபிகள் நாயகம் போதித்தவை அனைத்து நல்ல நெறிகள் தான். தாம் போதித்த நன்னெறிகளுக்கு இலக்கணமாக அவர் வாழ்ந்தார். சகோதரத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னதுடன் அவர் நின்று விடவில்லை. மதீனாவில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களின் இரு தரப்பினரிடையே சகோதரத்துவ ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். யூதர்களுடனும் நட்புறவு உடன்பாட்டை உருவாக்கிக் கொடுத்தார். அவர் போதித்த பாடங்களை அனைவரும் கடைபிடித்து ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதி, வளம், மகிழ்ச்சி, ஒற்றுமை நிறைந்ததாக மாற்ற இந்நாளில் உறுதியேற்போம் " என்று தெரிவித்துள்ளார்..
English Summary
Dr Anbumani Ramadoss Greetings about miladi nabi 2020