பேரக்குழந்தைகளுக்கு ஆசையாக வாங்கிய போண்டாவில் பிளேடு... சிறப்பு எஸ்.ஐ அதிர்ச்சி.. திண்டுக்கல்லில் பகீர்..!
Dindigul Blade Bonda Police Investigation 28 November 2020
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கனகராஜ் (வயது 57). இவர் தனது மகன் மற்றும் இரண்டு பேத்திகளுடன் விளாம்பட்டி காவல் நிலைய குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், கனகராஜ் தனது பேத்திகளுக்காக, அங்குள்ள நிலக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள கடையில் வடை மற்றும் போண்டா வாங்கி வந்துள்ளார்.
இந்த கடையில் இருந்து வாடிக்கையாக தனது குடும்பத்திற்கு போண்டா வாங்கி செல்லும் நிலையில், வழக்கம்போல நேற்றும் 5 போண்டா வாங்கி சென்றுள்ளார். இதனையடுத்து பேத்தி தனக்கு கொடுக்கப்பட்ட போண்டாவை சாப்பிட இரண்டாக பிரிக்கையில், அதில் முழு பிளேடு இருந்துள்ளது. இதனைக்கண்ட சிறுமி தனது தாத்தாவிடம் போண்டாவை காண்பித்து பிளேடு இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து பிற போண்டாக்களையும் கனகராஜ் பிரித்து பார்க்கவே, நல்ல வேலையாக அதில் பிளேடு ஏதும் இல்லை.
இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக நிலக்கோட்டை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷிற்கு தகவல் தெரிவித்துவிட்டு, போண்டா வாங்கிய கடைக்கு கனகராஜ் புறப்பட்டு சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியும் வந்துவிடவே, போண்டா தயாரிப்பின் போது, மாவு பாக்கெட்டை பிரிக்க உபயோகம் செய்த பிளேடு அஜாக்கிரதையாக செயல்பட்டதால் தவறுதலாக விழுந்துவிட்டது தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த அதிகாரிகள் போண்டா தயாரித்த தொழிலாளியை எச்சரிக்கை செய்த நிலையில், இனியும் இது போன்று நடந்தால் அல்லது சுகாதாரமற்ற முறையில் எந்த கடையில் இருந்து உணவு தயாரானாலும், சம்பந்தபட்ட நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து வரும் கனகராஜ் மீதுள்ள வன்மத்தால் வேண்டும் என்றே பிளேடு கலக்கப்பட்ட போண்டா கொடுக்கப்பட்டதா? என்பது குறித்த இரகசிய விசாரணையும் நடைபெற்று வருவதாக தெரியவருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul Blade Bonda Police Investigation 28 November 2020