குரோக் ஏஐ மூலம் எல்லை மீறி உருவாக்கப்படும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள்; எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..!
Central government issues notice to X platform due to the unrestrained Grok AI
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளங்களின் ஆதிக்கம் செலுத்தும் நவீன காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த ஏ.ஐ. உடனுக்கு உடன் கேட்ட தகவல்களை நமக்கு வழங்கி வருவதால் இதில் பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனை பயன்படுத்தி உருவாக்கப்படும் படங்கள், வீடியோக்கள் அனைத்தும் அசல் எது, போலி எது என தெரியாமல் அதனை பார்ப்பவர்கள் குழம்பும் வகையில் உள்ளது.
இதில், கூகுளின் ஜெமினி ஏஐ, சாட் ஜிபிடி, மெட்டா ஏஐ என பல செயற்கை நுண்ணறிவு தளங்கள் பிரபலமாக உள்ளன. இதற்கு போட்டியாக எலான் மஸ்க் நடத்தி வரும் எக்ஸ் தளம், ' குரோக்' என்ற செயற்கை ஏஐ தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த 'குரோக் ஏஐ' மூலம் பெண்களை மையப்படுத்தி அவர்களை அவதூறாகவும், ஆபாசமாகவும், அநாகரீகமாகவும், படங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து மத்திய அரசுக்கும் புகார்கள் சென்ற நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தலையிட்டுள்ளது.

அதன்படி, 2000-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் தொழில் நுட்பச்சட்டம் மற்றும் 2021-ஆம் ஆண்டின் ஐடி விதிகள் ஆகியவற்றின் கீழ், எக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, பயனர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் வகையில் செயற்கையாக படங்கள் மற்றும் வீடியோக்களை பயனர்கள் 'குரோக் ஏஐ' மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இத்தகைய செயல்கள் பாலியல் துன்புறுத்தலை இயல்பாக்குகின்றன என்றும், மற்றும் சட்டப் பாதுகாப்புகளை குறை மதிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளது. மேலும், சட்டவிரோத உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை தடுக்க தொழில்நுட்ப மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை விரிவாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வர்று சட்ட விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்குகளை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. அதேப்போன்று மோசமாக சித்தரிக்கப்பட்ட படங்களை நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதுடன், இதனை மீறினால், போக்சோ, பெண்களுக்கு எதிரான சட்டப்பிரிவுகள் உள்ளிட்டவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Central government issues notice to X platform due to the unrestrained Grok AI