பள்ளிப் பூட்டை உடைத்து துணிகரத் திருட்டு...! - மாணவர்களின் 'டேப்லெட்களை' அள்ளிச் சென்ற மர்ம நபர்கள்...!
daring theft by breaking school lock Mysterious individuals stole students laptops
தக்கலை அருகே அரசு பள்ளியில் துணிகர திருட்டு சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. பள்ளி அலுவலக அறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்பட்ட கையடக்க கணினிகளை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள மூலச்சலில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப் பள்ளியும் இயங்கி வருகிறது. கடந்த 25-ஆம் தேதி மாலை வழக்கம்போல் பள்ளி வகுப்புகள் முடிவடைந்ததும், தலைமை ஆசிரியர் லாரன்ஸ் அலுவலக அறையை பூட்டிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், நேற்று காலை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதற்காக வந்த துப்புரவு பணியாளர், தலைமை ஆசிரியரின் அறை கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இந்த தகவல் தலைமை ஆசிரியர் லாரன்ஸுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவல் கிடைத்ததும் பள்ளிக்கு விரைந்து வந்த அவர், அலுவலக அறைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த 3 கையடக்க கணினிகள் மாயமானது தெரியவந்தது. இதனால் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக தக்கலை காவலர்கள் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள் தீவிர விசாரணையை தொடங்கினர்.முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து அலுவலக அறையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த கையடக்க கணினிகளை அபகரித்து சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், திருட்டில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
daring theft by breaking school lock Mysterious individuals stole students laptops