கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக் கோரி போராட்டம்! திமுகவின் கூட்டணி கட்சி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கருகும் குறுவைப் பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக் கோரி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிவிப்பில், "காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 

குறுவை சாகுபடியை ஊக்குவிக்க தமிழ் நாடு அரசு குறுவைத் திட்டத்தை அறிவித்தது. இம்முறை டெல்டா மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஆனால், சில பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் வராததால் சாகுபடி செய்த நெற்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. 2023-2024ஆம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டும். 

ஆனால் இதுவரை 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு உள்ள நிலையிலும்  கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளதால் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லாமல் பயிர்கள் கருகியுள்ளன.

காவிரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வரை போராடி பெறப்பட்ட தீர்ப்பினை அமலாக்க மறுப்பதுடன் மேகேதாட்டு அணைப் பிரச்சனை உட்பட புதிய பிரச்சனைகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் நியாயத்தை மறுத்து வருகிறது கர்நாடக அரசு. 

தீர்ப்பினை அமலாக்கும்படி வற்புறுத்தவேண்டிய ஒன்றிய அரசு, அரசியல் சுயலாபத்துடன் மௌனம் காப்பதுடன், கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பொறுப்பில்லாமல் பேசி வரும் போக்கு கண்டிக்கத்தக்கது.

குறுவை பயிர்கள் கருகி வரும் அவசர சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்.  தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்து விட வலியுறுத்தி சி.பி.ஐ(எம்) சார்பில் வரும் ஆகஸ்ட் 14, 2023 அன்று டெல்டா மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய பெருங்குடி மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும்  கலந்து கொண்டு பேராதரவு அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டி கேட்டுக்கொள்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM Protest announce against Karnataka Govt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->