தமிழக பெண்களின் மர்ம உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி, சித்தரவதை செய்த ஆந்திரா போலீஸ்!
CPIM Complaint Against AP Police
கடந்த 11 ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், 5 பெண்கள் உட்பட 9 குறவர் இன மக்களை, ஆந்திரா சித்தூர் காவல்துறையினர் கடத்திச் சென்றதாக புகார் எழுந்தது.
மேலும், ஒருவார காலமாக அவர்களை அடைத்து வைத்து அடித்து, இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து, பெண்களின் மர்ம உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி, இரும்புக் கம்பியால் கொடூரமாக குத்தி சித்திரவதை செய்து உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்த அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 35) என்பவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல ஆந்திர மாநிலம், சித்தூர் காவல்துறையினர் வந்துள்ளனர்.

எதற்காக இரவு நேரத்திலேயே அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்ட பிரியா என்கிற அருணா (வயது 27) கண்ணம்மாள் (வயது 65), ஸ்ரீதர் (வயது 7) ஆகியோரையும் அடித்து வண்டியில் கடத்திச் சென்றுள்ளனர். இதனை அறிந்த ஐயப்பனின் சகோதரி சத்யா (வயது 40) என்பவர் ஜூன் 12ந் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலமாக புகார் செய்துள்ளார்.
இந்த செய்தியை அறிந்த ஆந்திர காவல்துறையினர் புகார் செய்த சத்யா, கணவர் ரமேஷ் (வயது 55), மருமகள் பூமதி (வயது 24) ஆகியோரையும் அதே சித்தூர் காவல்துறையினர் இரவோடு, இரவாக கடத்திச் சென்று கூடகலப்பட்டு கிரைம் காவல் நிலையத்தில் அனைவரையும் ஐந்து நாட்களாக லாக்கப்பிலேயே அடைத்து வைத்துள்ளனர்.
இச்சம்பவம் அறிந்து, அவர்களை மீட்க, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊத்தங்கரை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் வலியுறுத்தியதின் அடிப்படையில் அழைத்துச் சென்ற 7 பேர்களில் மூன்று பெண்கள் ஒரு சிறுவன், ரமேஷ் ஆகியோரை மட்டும் சித்தூர் காவல்துறையினர் கிருஷ்ணகிரி மத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பிரியா என்கிற அருணா, சத்யா, கண்ணம்மாள், ரேணுகா ஆகியோரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள், குறவர் பழங்குடி சங்கத் தலைவர்கள் நேரில் சென்று விசாரித்த போது, இப்பெண்கள் சித்தூர் காவல்நிலைய காவலர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள் என்றும், எங்களுடைய மர்ம உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி சித்தரவதை செய்தார்கள் என்றும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீரும், கபலையுமாக தெரிவித்துள்ளனர்.

உடனே இவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வரப்படுகிறது. ஆந்திர மாநில காவல்துறையினரின் இந்த சட்டவிரோத காட்டுமிராண்டித்தனமான அராஜக நடவடிக்கை தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் இன பெண்களை பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டு, கொடுமையான சித்தரவதை நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலம், சித்தூர் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் ஆந்திர மாநில அரசுடனும், காவல்துறையுடனும் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி குற்றமிழைத்த காவலர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு, சித்தரவதைக்குள்ளாக்குதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்று தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, கே பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
CPIM Complaint Against AP Police