லஞ்ச ஒழிப்பு வலை! குழந்தை திருமணத்தை மறைக்க கை நீட்டிய காவல் ஆய்வாளர்...! கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!
Corruption eradication net Police inspector reaches out cover up child marriage Incident caught red handed
தர்மபுரியைச் சேர்ந்த நிர்மல் குமார், 16 வயது சிறுமியை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்குப் பின் அந்தச் சிறுமி கர்ப்பமான நிலையில், சிகிச்சைக்காக பெற்றோர் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, குறைந்த வயதில் நடைபெற்ற குழந்தைத் திருமணமும், சிறுமி கர்ப்பமானதும் மருத்துவர்களின் கவனத்திற்கு வந்தது.இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரித்து, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (50) சிறுமியின் குடும்பத்தை அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது, “குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இருக்க, ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும்” என்று நேரடியாகக் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உடனே தர்மபுரி லஞ்ச ஒழிப்பு காவலரிடம் புகார் செய்தார். அவர்களின் அறிவுரையின் பேரில், ரசாயனப் பவுடர் தடவிய ரூ.50 ஆயிரம் பணத்தை, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலேயே இன்ஸ்பெக்டர் வீரம்மாளிடம் ஒப்படைத்தார்.
அந்த நேரத்தில் மறைந்து காத்திருந்த லஞ்ச ஒழிப்பு காவலர்கள், லஞ்சம் பெற்ற வீரம்மாளை கையும் களவுமாக பிடித்து உடனடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் தர்மபுரி முழுவதும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Corruption eradication net Police inspector reaches out cover up child marriage Incident caught red handed