'வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்'; விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை..!
Vijay Vasanth MP requests the Minister of External Affairs to ensure the safety of Indians in the Gulf countries
ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து, இன்று அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த போர் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
''சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வளைகுடா பகுதியில் மோசமடைந்து வரும் அரசியல் சூழ்நிலை குறித்து எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்திய தகவல்களின்படி, ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளை பாதித்துள்ளன. இதனால் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அதிகரிப்பு, விமானப் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் பதற்ற நிலை, அங்கு வாழ்ந்து வேலை செய்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும், அதில் பெரும்பங்கு வகிக்கும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அச்சம் மற்றும் நிலையற்ற சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
சில பகுதிகளில் குண்டு சத்தங்கள் கேட்கப்பட்டதுடன், அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் உடனடி மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய தூதரகங்களிலும் அவசர ஒத்துழைப்பு மையங்களை அமைத்தல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நேரடி அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல், இந்திய தொழிலாளர்களுக்கான தனிப்பட்ட உதவி எண்களை செயல்படுத்தி, விரைவான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.
நிலைமை மோசமடைந்தால் அவசர வெளியேற்றத்திற்கான முன்னெச்சரிக்கை திட்டங்களை தயார் செய்தல், இந்தியர்களின் பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் உறுதிசெய்ய அந்த நாடுகளுடன் தூதரக மட்டத்தில் தொடர்பை ஏற்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அவசரமான சூழ்நிலையில், இந்திய குடிமக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி தலையீட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இந்திய அரசு விரைவாகவும், உறுதியுடனும் செயல்படும் என நம்புகிறேன்.'' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Vijay Vasanth MP requests the Minister of External Affairs to ensure the safety of Indians in the Gulf countries