'நுகர்பொருள் வாணிப கழகம் ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாகவே பொருட்கள் அனுப்புவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'; பணியாளர் சங்கம் கடிதம்..!
Employees Association sends a letter urging action regarding the short weighing of supplies sent to ration shops
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜி. ராஜேந்திரன் ரேஷன் பொருட்கள் எடை குறைவு நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
''நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் என்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்றுவருகிறது.
இந்த வழக்கில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அளித்துள்ள மனுவில், கடந்த ஜனவரி மாதம் முதல் காஞ்சீபுரம், ஈரோடு, கடலூர், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சரியான எடையில் கொண்டு செல்லும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது என உண்மைக்கு மாறான தவறான தகவல்கள் எங்கள் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாற்றத்தினை எதிர்நோக்கி வெளிப்படைத் தன்மையுடன் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அரசும், பொதுமக்களும், பணியாளர்களும் எதிர்நோக்கி உள்ள நிலையில், நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாகவே பொருட்கள் அனுப்புவது வாடிக்கையாகவும், வழக்கமாகவும் இதுவரையிலும் உள்ளது.
எனவே அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Employees Association sends a letter urging action regarding the short weighing of supplies sent to ration shops