ராமநாதபுரத்தில் பரபரப்பு...! குழி தோண்டியபோது உடைந்த குழாய்...! - சீறிப்பாய்ந்த கேஸால் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்...!
commotion Ramanathapuram pipe broke while digging hole Motorists scream and run away due leaking gas
ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டணம்காத்தான் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் அமைந்துள்ள வணிக வளாகங்களை ஒட்டிய பகுதிகளில், தனியார் நிறுவனத்தின் சார்பில் நிலத்தடிக் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இல்லங்கள் பயனடைந்து வருகின்றன.

இந்த நிலையில், அப்பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக எந்திரத்தின் உதவியுடன் நிலம் தோண்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது நிலத்தடியில் பதிக்கப்பட்டிருந்த எரிவாயுக் குழாய் எதிர்பாராத விதமாக சேதமடைந்தது.இதையடுத்து குழாயிலிருந்து மிகுந்த அழுத்தத்துடன் எரிவாயு வெளியேறத் தொடங்கியது.
சூறைக்காற்றின் வேகத்தை ஒத்த சத்தத்துடன் கியாஸ் கசிந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. பாரதி நகர் முழுவதும் பரபரப்பு நிலவியதுடன், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உறைந்தனர்.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர்.
அவர்களுடன் காவலர்களும் சம்பவ இடத்தை அடைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். பொதுமக்கள் அணுகாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கசிவை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நீண்ட நேர அவசர மீட்புப் பணிக்குப் பிறகு சேதமடைந்த குழாய் சீரமைக்கப்பட்டு, எரிவாயு கசிவு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறுகையில், நிலத்தடி அமைப்புகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளாமல் எந்திரங்கள் மூலம் தோண்டும் பணிகள் நடைபெறுவதால் இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.
எனவே சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி மற்றும் கண்காணிப்பின்றி தோண்டும் பணிகளை மேற்கொள்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
English Summary
commotion Ramanathapuram pipe broke while digging hole Motorists scream and run away due leaking gas