சென்னை: மாரத்தான் ஓட்டத்தில் மயங்கி விழுந்து இளைஞர் பலி!
chennai youth dead
சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதிகாலை தொடங்கிய இந்தப் போட்டியில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அவர்களில் தாம்பரத்தைச் சேர்ந்த 24 வயது வங்கி ஊழியர் பரமேஷும் இருந்தார். ஓட்டத்தைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் தரையில் விழுந்தார். இதைக் கண்டு பங்கேற்பாளர்கள் பதற்றமடைந்தனர்.
உடனே அங்கு காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் பரமேஷ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரமான சம்பவம் பங்கேற்பாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.