பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை உதவி பேராசிரியர்கள் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு.!
chennai highcourt pachaiyappan education trust case postpond
கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் 152 பேர் உரிய தகுதியை பெற்றிருக்கவில்லை என்றும், தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை கடந்த வாரம் விசாரணை செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முறைப்படி நியமிக்கப்படாத 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என்று அறிவித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கை, இன்று பிற்பகல் நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, பேராசிரியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பேராசிரியர்களை பணிக்கு அனுமதிக்கவில்லை என்றும் வருகை பதிவேடானது கல்லூரியினுடைய முதல்வர்களின் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்றும் புகார் தெரிவித்தார்.
அதேநேரம், அறக்கட்டளை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேராசிரியர்கள் எவரும் பணிக்கு வரவில்லை என்றும் அவர்கள் பணிக்கு வருவதை யாரும் தடுக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன் பின்னர், தனி நீதிபதி அளித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை எண்ணும் படி பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பேராசிரியர்கள் வருவதை தடுக்கவில்லை என்று கூறும் கல்லூரி முதல்வர்கள், இது தொடர்பாக விளக்க மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதற்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் இருந்தால் அதையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்து இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.
English Summary
chennai highcourt pachaiyappan education trust case postpond