போலி பாஸ்போர்ட் விவகாரம் || டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு..!!
Central govt ordered to take action against ADGP Davidson Devasirvatham in fake passport issue
மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து போலி பாஸ்போர்ட் பெற்று பலர் வெளிநாடுகளுக்கு சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்குக் காரணம் அந்த காலகட்டத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதமும், உதவி காவல் ஆய்வாளராக இருந்த சிவக்குமாரும்தான் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய டேவிட்சன் தேவசீர்வாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் முக்கிய காவல்துறை பொறுப்பான உளவுத்துறையின் ஏடிஜிபியாக பணியமர்த்தப்பட்டார். உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தை விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் கைது செய்யவும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென தமிழ்நாடு காவல் தலைமையக டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கு காரணம் போலி பாஸ்போர்ட் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தின் மூலம் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தெரியவந்தது. இதன் காரணமாகவே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் முனுமுனுத்தன.
இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் வழக்கில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வராகி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Central govt ordered to take action against ADGP Davidson Devasirvatham in fake passport issue