நாமக்கல்: 16 வயது சிறுமி கர்ப்பம்... தலைமறைவான பெரியப்பா... போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!
Betrayal of Trust in Kumarapalayam 16-Year-Old Pregnant After Repeated Assault by Relative
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், 16 வயது சிறுமி ஒருவர் தனது குடும்ப உறவினராலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் தனியார் தியேட்டர் அருகே வசித்து வரும் இந்தச் சிறுமி, சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்திற்குச் சென்றுவிட்டுத் தனது ஊருக்குத் திரும்பியுள்ளார். ஊர் திரும்பிய சில நாட்களிலேயே சிறுமிக்குத் தாள முடியாத உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அவரை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், சிறுமியிடம் விவரத்தைக் கேட்டுள்ளனர்.
பெற்றோரிடம் அழுதுகொண்டே உண்மையை விவரித்த சிறுமி, அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த 'பெரியப்பா' முறையுள்ள நபர் ஒருவரே இதற்குக் காரணம் என்று தெரிவித்தார். அந்த நபர், சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி முதலில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், "இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் உன்னை விடுவிக்க மாட்டேன்" என மிரட்டியுள்ளார். இந்த அச்சத்தைப் பயன்படுத்தி, அவர் மீண்டும் மீண்டும் சிறுமியைப் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியது தெரியவந்தது.
தனது மகளின் நிலையைக்கண்டு ஆத்திரமடைந்த தந்தை, உடனடியாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட நபர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது தலைமறைவாக உள்ள அந்த நபரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Betrayal of Trust in Kumarapalayam 16-Year-Old Pregnant After Repeated Assault by Relative