8 மீனவர்கள் கைது... தூங்குதா வெளியுறவுத்துறை...? - மத்திய அரசை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்...!
8 fishermen arrested Is Ministry External Affairs sleeping Manickam Thakur who bribed central government
மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் சிறிதளவும் அக்கறை இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கொழும்பில் அதிகாரப்பூர்வ பயணத்தில் இருந்த நேரத்திலேயே இந்த நடவடிக்கை அரங்கேறியிருப்பது கவலைக்குரியது என்றும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டெடுப்பது தொடர்பாக இலங்கை அரசிடம் வெளியுறவுச் செயலர் நேரடியாக வலியுறுத்துவாரா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மேலும், 2023-ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 1,306 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 179 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் பிரவீன் சக்ரவர்த்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணிக்கைகளே தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் மத்திய அரசு முழுமையாகத் தவறியிருப்பதை வெளிப்படுத்துகின்றன என்றும், பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அணுகுமுறையையே மோடி அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளுடன் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, இதுதொடர்பாக இன்று (06.08.2026) நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
8 fishermen arrested Is Ministry External Affairs sleeping Manickam Thakur who bribed central government