அரியலூர் கொள்ளிடம் ஆற்றில் 36 பேர் சென்ற படகு கவிழ்ந்தது!!
ariyalur boat accident
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அதிகளவிலான நீரானது காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதிகப்படியான நீரானது மேட்டூர் அணைக்கு வந்து மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், ஏற்கனவே டெல்டா பாசனத்திற்காக குறைவான அளவில் நீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேட்டூர் அணை முழுவதும் நிரம்பியதால் கர்நாடகாவில் இருந்து வரும் நீர் மொத்தமாக உபரியாக வெளியேற்றப் படுகிறது.
இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆனது அதிகமாக சென்றுகொண்டிருக்கிறது. மேலும் காவிரியால் பலனடையும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கும்பகோணத்தை அடுத்த கபிஸ்தலம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து கொள்ளிடம் ஆற்றைக் கடந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலராமநல்லூர் கிராமத்திற்கு பரிசலில் 36க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அங்கு நடைபெற்ற கோவில் கும்பாபிசேகத்தில் பங்கேற்றத்திற்கு பின்னர் மீண்டும் மாலையில் பரிசல் மூலம் 36 பேர் கபிஸ்தலத்திற்கு புறப்பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததால் பயணம் செய்தவர்கள் நீரில் விழுந்தனர்.
இதையடுத்து, பரிசல் கவிழ்ந்தது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கும், தீயணைக்கும் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைக்கும் படையினர், 36 பேரையும் பத்திரமாக மீட்டனர். கொள்ளிடம் ஆற்றில் மூன்று நாட்களாக அதிக அளவில் தண்ணீர் சென்ற கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.மேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே உள்ள பரிசல் போக்குவரத்தை நம்பியே அப்பகுதி மக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.