சிவகார்த்திகேயன் – தனுஷ் சம்பளப் போட்டி? அவனைவிட நான்தான் சீனியர்! தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டும் தனுஷ்?
Sivakarthikeyan Dhanush salary competition I am senior to him Dhanush showing favoritism to producers
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவிட்ட நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். தொடர்ந்து வெளியாகி வரும் அவரது படங்கள் மெகா ஹிட் அல்லது சூப்பர் ஹிட் என்ற நிலையை எட்டியுள்ளன. சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படமும் சூப்பர் ஹிட் என்றே கருதப்படுகிறது. இந்த சூழலில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சினிமா வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில ஆண்டுகள் மிகவும் சாதகமாக அமைந்துள்ளன. ப்ரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு அவரது மார்க்கெட் சரிவடையும் என பலர் கணித்தனர். ஆனால், அந்த கட்டத்திலேயே அவர் கதைத்தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தினார். அதன் விளைவாக மாவீரன், அயலான், அமரன் போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றிப் பாதையில் சென்றன.
குறிப்பாக, ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி, சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. “எந்த மாதிரியான கதாபாத்திரத்தையும் சிவாவை நம்பி கொடுக்கலாம்” என்ற நம்பிக்கையை படைப்பாளர்கள் மத்தியில் அந்த படம் உருவாக்கியது. அதைவிட முக்கியமாக, அமரன் படத்தின் வியாபார வெற்றி, சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மதிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமரன் படத்திற்கு பிறகு அவர் சுமார் ரூ.30 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான பராசக்தி படத்திற்கும் அவர் ரூ.30 கோடியைத் தாண்டிய சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. அந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், எதிர்கால படங்களுக்கு அவர் இன்னும் அதிக சம்பளம் கேட்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சிவகார்த்திகேயனுக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே சம்பள போட்டி மற்றும் மறைமுக மோதல் இருப்பதாக ஒரு தரப்பு தொடர்ந்து பேசிவருகிறது. தனுஷ் மட்டுமல்ல, தன்னை ஆரம்ப காலத்தில் வளர்த்த சிலரையும் சிவகார்த்திகேயன் இப்போது ஒதுக்கிவிட்டார் அல்லது போட்டியாக மாறிவிட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இது உண்மையல்ல என்றும், வேண்டுமென்றே சிவகார்த்திகேயனை குறிவைத்து விமர்சனங்கள் செய்யப்படுகின்றன என்றும் அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவாதங்களுக்கு மேலும் தீ ஊட்டும் வகையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தனது சமீபத்திய பேட்டியில் ஓபனாக பேசினார். அவர் கூறியதாவது:
“சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன். சிவகார்த்திகேயன் ரூ.30 கோடி சம்பளம் கேட்டவுடன், பத்து கோடி ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த தனுஷ், ‘எனக்கு ரூ.35 கோடி கொடுங்கள்’ என்று கேட்கிறாராம். ‘சிவகார்த்திகேயன் இப்போதுதான் வந்தார். நான் அவருக்கு முன்னாடியே இருக்கேன். அவருக்கு 30 கோடி கொடுக்கும்போது எனக்கு 35 கோடி கொடுக்கணும்’ என்று சொல்கிறாராம். இப்படித்தான் இப்போ போட்டி போடுகிறார்கள். சிவா நான்கு ஹிட் கொடுக்கிறார், நானும் அதைவிட அதிகம் கொடுக்கிறேன் என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள். இதில்தான் இந்த சம்பள போட்டி நடக்கிறது” என்றார்.
திருப்பூர் சுப்ரமணியத்தின் இந்த கருத்துகள், சிவகார்த்திகேயன் – தனுஷ் இடையிலான சம்பளப் போட்டி உண்மையா, அல்லது சினிமா வட்டாரங்களில் பரவி வரும் பேச்சுகளா என்ற புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒருபக்கம் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க, மறுபக்கம் முன்னணி நடிகர்களிடையே சம்பள அளவீடு தொடர்பான போட்டி தீவிரமடைந்து வருவதாகவே தற்போதைய சூழல் காட்டுகிறது.
English Summary
Sivakarthikeyan Dhanush salary competition I am senior to him Dhanush showing favoritism to producers