மேகேதாட்டு அணை: தவெக அரசின் தெளிவான நிலைப்பாட்டை உடனே அறிவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி!
admk eps mehathathu issue karnataka tamilnadu tvk govt
மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தவெக அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த அவரின் அறிக்கையில், "மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது.
தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு, காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா ?
மேகேதாட்டில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது ? தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா ? காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி நதிநீர் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதாரம் ஆகும். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியாறு விளங்கி வருகிறது. மேகேதாட்டில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். காவிரி தொடர்பாக தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அ.இ.அதிமுக ஒரு நாளும் அனுமதிக்காது.
கர்நாடக துணை முதல்வரின் இப்பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
admk eps mehathathu issue karnataka tamilnadu tvk govt