சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை...! சென்னை மற்றும் புதுக்கோட்டையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனை...!
Action under Prevention Money Laundering Act Enforcement Department conducts intensive searches 5 locations Chennai and Pudukkottai
சென்னை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தொழிலதிபர்கள், டிராவல்ஸ் நிறுவனம் தொடர்புடையவர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் குளோபல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் நசீர் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சுமார் 6 அதிகாரிகள் கொண்ட குழு, பல்வேறு ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல், டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆஸ்மி என்பவரது ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கும் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரத்தில், புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொழிலதிபர்கள் மூவரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி செல்லையாவின் மகன் திருக்குமரன், வெல்டிங் பட்டறை நடத்தி வருவதுடன், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இறால் பண்ணையையும் நடத்தி வருகிறார். சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது வீட்டில் இரண்டு குழுக்களாகச் சென்ற 7 அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பயாஸ் என்பவர் திருச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது வீட்டிலும் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவர் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறார்.
அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த மூன்று இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Action under Prevention Money Laundering Act Enforcement Department conducts intensive searches 5 locations Chennai and Pudukkottai