ஆவின் பொருட்கள் விற்பனை! வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்க.!
Aavin sale milk agencies
ஆவின் நிறுவன பொருட்களை தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை செய்ததாக எழும் குற்றச்சாட்டு குறித்து பால்வளத்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக பால் முகவர்கள் சங்க நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்திய நிலையில் மார்ச்-4ம் தேதி முதல் நெய், பால் பவுடர், பாதாம் பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலையை ஆவின் நிறுவனம் கடுமையாக உயர்த்தியதை அனைவரும் நன்கறிவோம்.
இந்நிலையில் ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியதற்கு காரணம் தனியார் நிறுவனங்களின் பால் பொருட்களின் விற்பனை விலையை விட ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலை மிக குறைவாக இருப்பதால் தனியார் நிறுவனங்கள் ஆவின் பால் பொருட்களின் லேபிளை கிழித்து விட்டு அதில் தங்களின் லேபிளை ஒட்டி விற்பனை செய்வதாக தனியார் நிறுவனங்கள் மீது தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. நாசர் அவர்கள் குற்றச்சாட்டு கூறியதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஏனெனில் ஆவினில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஆவின் நிறுவனத்திலேயே ஊழல் தடுப்பு பிரிவு தனியாக இயங்கி வரும் சூழலில் அவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அதனை ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வுக்கு காரணமாக பால்வளத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அப்படியானால் தினசரி மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் ஆவின் பாலுக்கான விற்பனை விலையும் தனியார் நிறுவனங்களை விட மிக குறைவாகவே காலங்காலமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் அதிலும் ஆவின் பால் பாக்கெட்டுகளையும் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து லேபிள் மாற்றி முறைகேடுகளில் ஈடுபடுகின்றனவா..? என்கிற சந்தேகம் எழுகிறது. ஒருவேளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் கூறுவது போல் நடந்திருக்குமானால் அது ஆவின் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே இதுவரை தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் லேபிளை கிழித்து விட்டு அதில் தங்களின் லேபிளை ஒட்டி மாற்றி விற்பனை செய்ததாக இது வரை எத்தனை புகார்கள் வரப்பெற்றுள்ளது..? அதில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது..? அந்த வழக்குகளில் தொடர்புடைய தனியார் பால் நிறுவனங்கள் எவை..? சம்பந்தப்பட்ட வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..? என்பது குறித்து ஆவின் நிர்வாகம் தரப்பிலும், தமிழக பால்வளத்துறை தரப்பிலும் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.