91 பவுன் நகைகள் அவுட்...! தேனி அருகே அரசு ஊழியர் வீட்டில் நடந்த துணிகரக் கொள்ளை...! - அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்...!
91 pounds jewelry found daring robbery government employee house near Theni Shocked family
தேனி பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டை உடைத்து 91 பவுன் தங்கநகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே பழனி செட்டிபட்டி ஆர்.எம்.டி.சி காலனியை சேர்ந்த செல்வராஜின் மனைவி லட்சுமி (53). இவரது மகன் பாண்டித்துரை காவலராக பணியாற்றி வருகிறார். மகள் லாவண்யா, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக தொழிலாளர் நலத்துறையில் கணினி விவர பணியாளராக பணியாற்றி வருகிறார்.

குடும்ப உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேளாங்கன்னிக்கு செல்ல வேண்டியிருந்ததால், வீட்டை பூட்டி குடும்பத்தினர் அனைவரும் உறவினர்களுடன் வெளியூர் சென்றிருந்தனர்.சில நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் பீரோவை சோதனை செய்தனர்.அப்போது பீரோவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், செயின், தோடு, பிரேஸ்லெட், வளையல் உள்ளிட்ட 91 பவுன் தங்கநகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் மாயமானது தெரியவந்தது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு மர்ம கும்பல் திட்டமிட்டு கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில், பழனி செட்டிபட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தேனி அருகே தப்புக்குண்டு பகுதியில் உள்ள தனியார் மில்லிலும் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.அங்கு தலைமை காவல் அதிகாரியாக பணியாற்றி வரும் சிவக்குமார் (55), மில்லில் இருந்த வாட்டர் பம்பு, மின்மோட்டார் உள்ளிட்ட ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டுப் போனதாக புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வீரபாண்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தேனி பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பு குறித்த கவலையையும் அதிகரித்துள்ளது.
English Summary
91 pounds jewelry found daring robbery government employee house near Theni Shocked family