தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும்..அதிமுக வலியுறுத்தல்!   - Seithipunal
Seithipunal


இந்த கல்வியாண்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீதமான இடங்களை அரசின் இடஒதுக்கீடாக வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதிமுக புதுவை மாநில செயளாலர் அன்பழ்கன் வலியுறுத்தியுள்ளார்.

மத்தியில் பிரதமராக மோடி அவர்கள் பதவியேற்றதில் இருந்து அட்டவணை இனத்தவர், சமுதாயத்தில் பின் தங்கிய ஒடுக்கப்பட்டு விளிம்பு நிலையில் உள்ள மக்களின் ஏற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் உரிமையை கல்வியால் மட்டுமே பாதுகாக்க முடியும் என அண்ணல் அம்பேத்கர் கூறியிருந்தார். அதனடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகள் தரமாக கல்வி பயில வேண்டும் என மத்திய அரசு கல்வி உரிமைச்சட்டத்தை கொண்டுவந்தது.

இச்சட்டத்தின் படி நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் ஏழை எளிய மாணவர்களின் பிள்ளைகள் தரமான கல்வி பயில 25 சதவீத மாணவர்களுக்கு கட்டணமில்லா இலவச கல்வியை வழங்க வேண்டும். இதற்காக கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும். புதுச்சேரியில் அண்டை மாநிலமான தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியிலும், அதனை தொடர்ந்து  எடப்பாடியார் அதிமுக ஆட்சியிலும் கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தரமான தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெறுகின்றனர்.

மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜகவின் கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டத்தை இங்கு அமுல்படுத்தாது வியப்பாக உள்ளது. தற்போது தனியார் பள்ளிகளில் அட்டவணை இன பிள்ளைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதை தவிர்த்து மேலும் 25 சதவீத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். இதில் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய பிரிவின் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கி எதிர்காலத்தில் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லமுடியும்.

இன்றுவரை தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தாதது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இதற்கு மேலும் புதுச்சேரி ஏழை எளிய மாணவர்களின் இலவச கல்வி பயிலும் உரிமைகள் பறிக்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சரும்  துணைநிலை ஆளுநரும்  உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழத்தில் உள்ள அனைத்து பாடங்களிலும் 25 சதவீத உள் ஒதுக்கீட்டை புதுச்சேரி மாநிலத்தல் சட்டப்படி வழங்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகாலமாக சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் வழங்கப்படும் 25 சதவீத புதுச்சேரி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை பெற துணைநிலை ஆளுநர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்காதது வருத்தமளிக்க கூடிய விஷயமாகும். புதுச்சேரி மாணவர்களுடைய உரிமையை பெற்றுத்தர வேண்டியது துணைநிலை ஆளுநருடைய தலையாய கடமையாகும். இது சம்பந்தமாக புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் மத்திய அரசு அனுமதியளித்தால் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டியது பல்கலைக்கழக துணைவேந்தரின் பொறுப்பாகும்.

நாடுமுழுவதும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் குறைந்தபட்சம் 50 சதவீத இடஒதுக்கீடு மாநில ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என மத்திய பாஜக அரசு முடிவெடுத்து தேசிய மருத்துவ கவுன்சில் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை வெளியிட்டது. புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி அரசானது மத்திய அரசின் இந்த அறிவிப்பை கூட செயல்படுத்த முன்வராதது மத்திய பாஜக அரசுக்கு நேர் எதிரான செயல்பாடாக உள்ளது. இதிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், துணைநிலை ஆளுநர் அவர்களும் இணைந்து இந்த கல்வியாண்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீதமான இடங்களை அரசின் இடஒதுக்கீடாக வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதிமுக புதுவை மாநில செயளாலர் அன்பழ்கன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

50 percent reservation should be provided in private medical colleges AIADMK's insistence


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->