தந்தையின் குடிப்பழக்கத்தால் 16 வயது மகள் விபரீத முடிவு..! சிக்கிய உருக்கமான கடிதம்.. வேலூரில் சோகம்...!
16 year old girl commits suicide in Vellore
வேலூர் மாவட்டத்தில் தந்தையின் குடிப்பழக்கத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு 16 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்னராஜாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிரபு. இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பிரகாஷ் (17) என்ற மகனும், விஷ்ணுபிரியா (16) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
எப்பொழுதும் வீட்டில் சண்டையும், சச்சரவாக இருந்ததால் மனவேதனை அடைந்த விஷ்ணு பிரியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து மதியம் தாய் கற்பகம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கற்பகம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக விஷ்ணு பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் விஷ்ணு பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், விஷ்ணுபிரியா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும் என்று எழுதியிருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
16 year old girl commits suicide in Vellore