சத்தியாகிரகப் போராட்டத் தியாகி நாகப்பன் படையாட்சியின் 112 வது நினைவுநாள் அனுசரிப்பு.
112 th Anniversary of the Martyrdom of Satyagraha Martyr Nagappan padayatchi
உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகி நாகப்பன் படையாட்சியின் 112 வது நினைவுநாள் அனுசரிப்பு.
தமிழகத்தின் நாகை மாவட்டம், பூம்புகார் அடுத்த கீழப்பெரும்பள்ளத்தில் 1891 இல் பிறந்தவர் நாகப்பன் படையாட்சி. இவர் 19 ஆம் நூற்றாண்டில் கூலித்தொழிலாளியாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். 1906 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அரசு கொண்டு வந்த ஏசியாடிக் பதிவு சட்டத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துக்கொள்ளக் கூடாது என மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த போராட்டத்தில் காந்தியடிகளின் கட்டளை ஏற்று நாகப்பன் படையாட்சியும் ஈடுபட்டு 1909 ஆம் ஆண்டு ஜீன் 21 ஆம் நாள் சிறைக்கு சென்றார். 10 நாள் சிறைத்தண்டனைப் பெற்று வெளியில் வந்த இவர், அதே ஆண்டு ஜீலை 06 ஆம் தேதி மரணத்தைத் தழுவினார்.

நாகப்பன் படையாட்சியின் மரணச் செய்தி கேட்ட மகாத்மா காந்தியடிகள் பெரும் வேதனையடைந்தார். அவரது படத்தை பத்திரிக்கைகளில் வெளியிடச் சொல்லி இந்தியாவில் பிரச்சாரம் செய்து வந்த போலக் என்பவருக்கு லண்டனிலிருந்து கடிதம் எழுதினார்.
1914 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் சகோதரர் ஒருவரின் இறப்பிற்கு தென்னாப்பிரிக்காவிலிருந்து பலர், கடிதம் எழுதினர். அந்த கடிதங்களுக்கு பதில் அளித்த காந்தியடிகள், ‘நாகப்பனின் மரணத்தை விட எனது சகோதரனின் மரணம் எனக்கு வலிமிகுந்ததாக இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னாளில் 1914 ஆ,ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியீல் கலந்துகொண்ட காந்தியடிகள் அங்குள்ள ஜொகனஸ்பர்க் நகரின் கல்லறைத்தோட்டத்தில் நாகப்பன் படையாட்சிக்கு நினைவுக் கல்லையும் திறந்துவைத்து, அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து பேசியுள்ளார்.

இத்தகைய உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டத் தியாகியின் 112 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்று அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்த பலரும் தமிழ்நாடு அரசு விரைவில் நாகப்பன் படையாட்சிக்கு நினைவு மண்டபம் அமைத்து அவரது நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
112 th Anniversary of the Martyrdom of Satyagraha Martyr Nagappan padayatchi